July 16, 2009

அறை எண் 305ல் அபத்தம்

சமீபத்தில் சன் டிவியில் அறை எண் 305ல் கடவுள் பார்க்க நேர்ந்தது. சிறிது நேரத்திலேயே அதைப் பார்ப்பது நேர விரயம் எனப் புரிந்தது. சில காரணங்களால் தொடர்ந்து பார்த்தேன்.

சில காலமாகவே மீடியாக்களில் வரும் சில அபத்தங்கள் இப்படத்தில் சற்றே தூக்கலாக இருந்தது. அதுவும் இந்த சாப்ட்வேர் மக்களைப் பற்றியும் சாப்ட்வேர் கம்பெனிகளைப் பற்றியும் இது போன்ற அரை வேக்காட்டுத்தனமான விமர்சனங்கள் எதிர்ப்போரின்றி உலா வருகின்றன.

படத்தில் வரும் ஒரு சாப்ட்வேர் கம்பெனியின் பெயர் கொள்ளையோசிஸ். அதில் வேலை பார்ப்பவர்கள் அனைவர் விரல்களையும் சிறியதாக்குகிறார் நாயகன். அதோடு அவர்களை பிச்சை வேறு எடுக்கச் சொல்கிறார். காரணம் அவர்கள் அளவுக்கு அதிகமாக பணம் சம்பாதிக்கிறார்களாம். இது ராணுவ வீரர்கள் சம்பளத்தை விட அதிகமாம். அது முறையில்லையாம். அப்படியென்றால் சினிமா நாயக நாயகிகள் வாங்கும் சம்பளம் எப்படியாம்?

சாப்ட்வேர் காரானுக்கு கம்பெனியே வரியைப் பிடித்துக்கொண்டு மீதியை கொடுக்கிறது. சினிமாகாரர்களுக்கு எப்படி? அதை வேறு விளக்க வேண்டுமா? கறுப்புப் பணம் பற்றி பெரிதாகப் பேசிய சிவாஜி படத்திலேயே சினிமாவில் உலாவும் கறுப்பு காணாமல் போனதே!

அரசு ஊழியர்கள் மட்டும் தான் வரி கட்டி நாட்டையே தாங்குகிறார்களாம். சாப்ட்வேர் மக்களும் சாப்ட்வேர் கம்பனிகளும் வரி கட்டாமல் சுவிஸ் பேங்கிலா பணத்தைப் போட்டு வைக்கிறார்கள்?

சினிமாவில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கும் கோடிகளும் சாப்ட்வேர் மக்கள் சம்பாதிக்கும் லட்சங்களும் நேர் வழியில் வருபவை. ஊழல் செய்தோ ஊரை ஏமாற்றியோ வருவதல்ல. இனி வரும் காலங்களில் இது போன்ற அபத்தக் கருத்துகளைப் பரப்பாமல் படங்கள் வரும் என நம்புவோம்!